ஆர்.கே.நகரில் அதிமுகதான் 100 சதவீதம் வெற்றி பெறும்.. எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் 'அடடே' காரணம்
ஆர்.கே. நகரில் அதிமுக 100 சதவீம் வெற்றி பெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை: அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுக 100 சதம் வெற்றி பெறும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதியின் எம்எல்ஏவாகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மறைந்தார். அவர் மறைந்ததையடுத்து ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று மீண்டும் இடைத்தேர்தலை சந்தித்த போது நட்சத்திர தொகுதியாக மாறிப்போன ஆர்.கே. நகர் தொகுதி, அவர் மறைந்த பின்னர் உருவான காலி இடத்திற்கும் அதே பரபரப்போடு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
விறுவிறு சசி அணி
இந்த தொகுதிக்கு எப்போது தேர்தல் வரும் என்று அரசியல் கட்சிகள் காத்திருந்த நிலையில், வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து ஜெயலலிதாவின் சொந்த தொகுதியை கைப்பற்ற சசிகலா ஆதரவு அதிமுகவினர் களமிறங்கியுள்ளனர்.
சுறுசுறு தினகரன்
இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கூடிய அதிமுக ஆட்சிமன்றக் குழு கூடியது. கூட்டத்தின் இறுதியில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கிறுகிறு முதல்வர்
இந்நிலையில், கோவையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தத் தொகுதியில் 100 சதவீதம் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.
சரிசரி விடுங்க..
ஆர்.கே. நகர் தொதியில் வெற்றி வந்தாலும் தான் முதல்வர் இடத்திற்கு வர மாட்டேன் என்றும் முதல்வர் எடப்பாடியார் நன்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் தினகரன் சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்நிலையில் இப்போதைக்கு முதல்வர் பதவி பறிபோகாது என்ற நிலையில், ஆர்.கே. நகரில் தினகரனுக்கு 100 சதவீதம் வெற்றி என்று பழனிச்சாமி சொல்வதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.