தீபாவளியன்று வேலை நிறுத்தம்.. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவிப்பு
போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளியன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை: தீபாவளியன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
25 சதவீதம் போனஸ் என்பன உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகத்துடன் ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, தீபாவளி தினத்தன்று அக்டோபர் 28-ஆம் தேதி இரவு 8 முதல் 29-ஆம் தேதி இரவு 8 மணி வரை சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அறிவிப்புக்கு எதிராக பொது நல வழக்கு தொடர அனுமதி கோரி, பேட்ரீக் என்ற வழக்கறிஞர், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுலிடம் முறையிட்டார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு, உரிய நேரத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டால், அந்த மனு பட்டியலிடப்பட்டு நாளை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தீபாவளியன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பின்னர் நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications