108 கிலோ பாகற்காய் யாகம்.. தூத்துக்குடி பிரத்தியங்கரா தேவி கோவிலில் கோலாகலம்
தூத்துக்குடி: தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி ஆலயத்தில் உலகமக்கள் சர்வநோய்கள் நீங்கி நலமாக வாழவேண்டி உலகிலேயே முதல் முறையாக 108கிலோ பாகற்காய் மகா யாகம் நடந்தது.
தூத்துக்குடியை அடுத்துள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர்நகரில் தமிழகத்திலேயே மிக உயரமாக 11அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சுவாமிகள் நிறுவப்பட்டு நாள்தோறும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகளுடன் கூடிய யாகம் நடத்தப்படுகிறது.
இதன்படி வரும் தை அமாவாசையை முன்னிட்டு உலக மக்கள் அனைவரும் சர்வநோய்கள் நீங்கி நலமாக வாழவேண்டியும், திருமணத்தடை அகலவும், புத்திரபாக்யம் பெறவேண்டியும் பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு உலகிலேயே முதல்முறையாக 108கிலோ பாகற்காய் மகா யாகம் இன்று நடந்தது.
அத்துடன், 108 கிலோ வத்தல், மூலிகைகளான திப்பிலி, கண்டங்கத்திரி, ஏலக்காய், சுக்கு, மிளகு, வேப்பெண்ணை யாகமும் நடந்தது. பாகற்காய், மூலிகைகள் யாகமானது பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் முன்னிலையில் நடந்தது. யாக வழிபாடுகளை தொடர்ந்து பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
மலேசிய பக்தர்கள் வருகை
மகாயாகத்தில் மலேசியா பக்தர்கள் டத்தோ செந்தில்நாதன், டத்தோ கிருஷ்ணன், சீன நாட்டு பக்தை பிரான்சிஸ்கா, மாவட்ட சேவாதள தலைவர் ரமேஷ்கிருஷ்ணன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பிரத்தியங்கிராதேவி, காலபைரவரை வணங்கி சென்றனர்.
உலகில் நல்லமழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், மக்கள் நலமாக வாழவேண்டியும் பிரத்தியங்கிராதேவிக்கு உலகிலேயே முதல் முறையாக 2013கிலோ வத்தல் யாகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.