10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நெல்லையில் தொடங்கியது. இம்மாதம் 15ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைய உள்ளது.
திருநெல்வேலி: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணிகளை இரு வாரங்களுக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 8ம் தேதி பொது தேர்வு தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 23 ஆயிரத்து 560 மாணவிகள் உள்பட 46,199 பேர் எழுதியுள்ளனர். கல்வி மாவட்ட அளவில் நெல்லை கல்வி மாவட்டத்தில் 16,270, தென்காசி கல்வி மாவட்டத்தில் 15,093, சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 14,836 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
மாற்று திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மதுரை மத்திய சிறை கைதிகள் 20 பேரும், பாளை சிறை கைதிகள் 24 பேர் என மொத்தம் 44 கைதிகளும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிந்ததை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.
ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அளவில் பாளை ஜான்ஸ் பள்ளியிலும், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அளவில் டவுன் சாப்டர் பள்ளியிலும், தென்காசி கல்வி மாவட்ட அளவில் மஞ்சம்மாள் மேல்நிலைப்பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
முன்னதாக விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்ட அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர். இந்த பணிகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.