ஹைட்ரோ கார்பனை எதிர்த்து 113 நாளாக போராட்டம்- கண்டு கொள்ளாத அரசுகள்: அதிருப்தியில் நெடுவாசல் மக்கள்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகத் தொடர்ந்து 113வது நாளாக நெடுவாசல் மக்கள் போராடியும் இதுவரை எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்டு கொள்ளாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நெடுவாசல் மக்கள் 2வது கட்டமாக கடந்த ஏப்ரல் 12ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 100 கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெண்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையில் நூதனப் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், பெண்கள் மற்றும் விவசாயிகள் பிரதமராகவும். முதல்வராகவும் பதவி பிரமாணம் செய்து கொள்வதைப் போன்று சித்தரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதவிர, பெண்களும், விவசாயிகளும் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர். இன்று 113வது நாளாகப் போராட்டம் நடத்தியும் தங்களது கோரிக்கை குறித்து கண்டு கொள்ளாத அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எத்தனை நாட்கள் ஆனாலும் திட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று நெடுவாசல் மக்கள் திடமாய் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications