10, 11, 12ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு.. மாணவர்களை ‘ஸ்மார்ட்’டாக்கும்.. கல்வியாளர்கள் நம்பிக்கை
பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கல்வித் துறையின் அறிவிப்பு மாணவர்களை மேம்படுத்தும் என்று கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை: நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் டூ மதிப்பெண்களும் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக புதிய பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசின் இந்த அறிவிப்பிற்கு கல்வியாளர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கல்வியாளர் சோமசுந்தரம் கூறியதாவது:

வரவேற்பு
பாடத்தில் மாற்றம் வரவேற்கத் தக்கது. 3 மணி நேரத் தேர்வு நேரத்தை குறைக்காமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். பாடத்திட்டம் உறுதியாக மாற்றப்பட வேண்டும். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக பாடத்திட்டதில் எந்த வித மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது.

பொதுத் தேர்வு அவசியம்
பாடத் திட்டங்களை மாற்றி அமைத்தால் தான் நல்ல மாணவர்களை பெற முடியும். 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளில் பொதுத்தேர்வு வைப்பது அவசியம். ஏன்னென்றால் தனியார் பள்ளிகள் கடந்த காலங்களில் 11ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் விட்டுவிடுவதால் மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.

தரமற்ற மாணவர்கள்
அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட முதல் செமஸ்டர் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருக்கின்றனர். அதற்கு காரணம் தனியார் பள்ளிகள் 11ம் வகுப்பு பாடத்தை நடத்தால் விட்டுவிடுவதுதான். எனவே, தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

சுகமான சுமை
பாடத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மாணவர்கள் சுமை என்று நினைப்பது தவறு. சுகம் என்று நினைக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 11ம் வகுப்பிலேயே 12ம் வகுப்பிற்கான பாடங்களை நடத்த தொடங்கி விடுவதால், 2 ஆண்டுகளுக்கும் 12ம் வகுப்பு பாடங்களையே மாணவர்கள் படிக்கின்றனர். இதனால் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள்.

சாதிக்க முடியாவில்லை
ஆனால், அந்த மாணவர்தான் மருத்துவப்படிப்பில் முதல் செமஸ்டரில் தேர்ச்சி பெற முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதே போன்று ஐஐடி உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளிலும் தமிழக மாணவர்களால் சாதிக்க முடியவில்லை.

தரமான ஆசிரியர்கள்
நிறைய பள்ளிகளில் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியர்கள் இல்லை. துணைவேந்தர்கள் இல்லை. எல்லாமே சரி செய்யப்பட வேண்டும். அரசு பள்ளிகளைப் பொருத்தவரை ஆசிரியர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் சோமசுந்தரம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications