தேமுதிக: மொத்தம் 20.. 2 ஆப்சென்ட்.. 6 சஸ்பெண்ட்.. கூட்டத்துக்கு வந்தது 12!
சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேரின் சஸ்பெண்ட் நீடிப்பதால் இன்றைய கூட்டத்திற்கு மிச்சம் உள்ள 14 பேரில் 12 பேர் மட்டுமே வந்தனர். வழக்கம் போல விஜயகாந்த் வரவில்லை. அதேபோல அவரிடம் முன்பு தேர்தல் பிரசாரத்தின்போது சரமாரியாக அடிவாங்கி பின்னர் எம்எல்ஏவான தர்மபுரி பாஸ்கரும் வரவில்லை.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் ஜெயித்து புதிய அந்தஸ்து பெற்றது தேமுதிக. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.
இந்த நிலையில் விஜயகாந்த்தின் போக்கு பிடிக்காமல் கட்சியின் அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியை விட்டு விலகினார். எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது.
இந்த நிலையில் விஜயகாந்த் போக்கில் அதிருப்தி அடைந்து நடிகர் அருண் பாண்டியன், சுந்தரராஜன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்ட 8 பேர் விஜயகாந்த்தை விலகி விட்டனர். அதிமுக ஆதரவு நிலையை எடுத்து தனித்துச் செயல்பட்டு வருகிறார்கள்.
இதனால் தேமுதிக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 20 ஆக சரிந்தது. இதில் எதிர்க்கட்சி துணை தலைவர் மோகன் ராஜ், கொறடா சந்திரகுமார், கே.தினகர், கும்மிடிப்பூண்டி சேகர், பார்த்திபன், எல்.வெங்கடேசன் உள்ளிட்ட 6 பேர் சட்டசபையில் நடந்து கொண்ட செயலுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நடப்புத் தொடரில் அவர்களால் 10 நாட்கள் பங்கேற்க முடியாது.
இதனால் மிச்சம் 14 பேர் மட்டுமே உள்ளனர். இதில் விஜயகாந்த்தும், பாஸ்கரும் இன்று சபைக்கு வரவில்லை. விஜயகாந்த் ரொம்ப காலமாகவே வரவில்லை. மற்ற 12 பேரும் கலந்து கொண்டனர். அதேபோல அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்கள் 8 பேரும் வழக்கம் போல கலந்து கொண்டனர்.