ஒரே ஒரு பதவி.. தக்க வைக்கத் தவிக்கும் ஒருவர்.. தட்டிப் பறிக்க துடிக்கும் 12 பேர்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் ஞானதேசிகன் நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ரொம்ப நாளாகவே இருந்து வருகிறது. ஆனால் புதிய தலைவர் அறிவிப்பைத்தான் காணோம். இந்த நிலையில் இப்பதவியைக் கைப்பற்ற கிட்டத்தட்ட 12 பேர் மோதி வருகிறார்களாம்.
ஆனால் அதேசமயம், தலைவர் பதவியில் தானே நீடிக்கத் தேவையான முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருகிறாராம் ஞானதேசிகன்.
ஆனால் இந்தப் பதவியைப் பிடிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது தீவிரமாக முயல்வதாக தெரிகிறது. ஒருவேளை இப்பதவி கிடைக்காவிட்டால் அகில இந்திய அளவில் முக்கியப் பதவியை அவர் எதிர்பார்க்கிறாராம்.
இரண்டில் ஒன்று.. எனக்குத் தந்தால் நன்று
அகில இந்திய காங்கிரஸ் பொருளாளர் பதவி அல்லது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி. இந்த இரண்டைத்தான் தற்போது ப.சிதம்பரம் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.
பதவியை கொடுங்க.. மத்ததைப் பாருங்க
தமிழக காங்கிரஸ் தலைவராக தன்னை நியமித்தால், இழந்த பெருமையை எப்படி மீட்டுத் தருகிறேன் பாருங்கள் என்றும் கட்சி மேலிடத்திடம் ப.சிதம்பரம் சவால் விட்டுக் கூறியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
விடுவோமா.. நாங்களும் வருவோம்ல...
ஆனால் ப.சிதம்பரத்திற்குக் கட்டையைக் கொடுக்க பிற கோஷ்டித் தலைவர்களும் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளனர்.
அடேங்கப்பா.. எம்பூட்டுப் பேரு....
ஜி.கே.வாசன், எச். வசந்தகுமார், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, அன்பரசு, ஈவிகேஎஸ் இளங்கோவன் என கிட்டத்தட்ட 12 கோஷ்டிகளின் தலைவர்கள் தலைவர் பதவியைக் குறி வைத்து டெல்லியை சூழ்ந்துள்ளனராம்.
சிண்டிகேட்
இதில் சிலர் வாசன் தரப்புக்கு மறைமுமகாக ஆதரவு தெரிவித்துள்ளனராம். அதாவது தங்களுக்குத் தலைவர் பதவி தராவிட்டால், தற்போதைய தலைவர் ஞானதேசிகனே நீடிக்கட்டும் என்கிறார்களாம் இவர்கள். ஆனால் ப.சிதம்பரத்திற்குத் தரக் கூடாது என்பது இவர்களின் கோரிக்கையாம்.
லீடிங்கில் யாரு
திருநாவுக்கரசர், வசந்தகுமார் உள்ளிட்ட சற்றும் சம்பந்தமே இல்லாத சிலர் தற்போதயை நிலையில் கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பார்க்கலாம். கடைசி நேரத்தில் அரியணை ஏறப் போவது யார் என்பதை!