தொடரும் நீட் குளறுபடிகள்..மதுரை நரிமேட்டில் இந்தியில் வினாத்தாள்..5 மணி நேர தாமதத்துக்கு பின் தேர்வு
மதுரை நரிமேட்டில் இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு 120 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video
மதுரை: மதுரை நரிமேட்டில் இந்தியில் நீட் வினாத்தாள் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு 120 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அவர்களுக்கு தமிழில் வினாகத்தாள் கொண்டு வரப்பட்டு 5 மணி நேரத்துக்கு பின்னர் தேர்வு தொடங்கியது.
நாடு முழுவதும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. மாணவனின் தந்தை மரணம், கோவையில் மாணவன் மயக்கம், சேலம் மாணவிக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.
வினாத்தாள்கள் அவரவர் தாய்மொழியில் கேட்கப்படும் என்பது விதியாகும். இந்நிலையில் மதுரை நரிமேட்டில் தேர்வு எழுத சென்ற போது அவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தது.
இதை கண்டு 120 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தேர்வு கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டவுடன் 24 மாணவர்களுக்கு மட்டும் தமிழில் வினாத்தாள் கொடுக்கப்பட்டு தேர்வு எழுத வைக்கப்பட்டது.
மீதமுள்ள 96 மாணவர்களும் தேர்வு மையத்திலேயே தங்க வைத்தனர். இதையடுத்து 5 மணி நேர தாமதத்துக்கு பின்னர் தமிழில் வினாத்தாள் கொடுக்கப்பட்டு தேர்வு தொடங்கியது. இதனிடையே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியதாக கூறப்பட்டது.
ஆனால் அவர்களுக்கு பப்ஸ் மட்டுமே வழங்கியதாக பெற்றோர் புகார் கூறுகின்றனர். காலையிலும் அவர்கள் ஏதும் உணவு அருந்தாத நிலையில் அவர்களை உணவருந்த வெளியே அனுப்பாமல் இதுபோல் குளறுபடிகளால் பெற்றோர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இதுபோல் சேலம் மெய்யனூரிலும் வினாத்தாள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்களுக்கும் தாமதமாக தொடங்கிய தேர்வு 3.30 மணிக்கு முடியும் என கூறப்படுகிறது.