ஆளுநர் விரைவில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.. செங்கோட்டையன் நம்பிக்கை
124 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளதாக அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைவில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்தினார்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், 124 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளதாகவும் ஆளுநர் விரைவில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் உள்ளோம். காவல்துறை எங்களை அச்சுறுத்த முடியாது. காவல் துறை நடத்திய விசாரணையிலும் எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக இருப்பாதவே கூறியுள்ளனர். மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கூறிய புகாரில் உண்மை இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications