124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது- ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார்: ஜெயக்குமார் நம்பிக்கை
தங்களுக்கு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சசிகலா முதலில் தமக்கு 134 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி வந்தார். பின்னர் கூவத்தூர் ரிசார்ட்டில் பேசும் போதெல்லாம் 129 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறி வந்தார்.

சசிகலாவுக்கு சிறைத் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தங்களுக்கு 125 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினர்.
ஆனால் இதுவரை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதையடுத்து இன்று மீண்டும் ஆளுநரை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது கோஷ்டியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்தினர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
ஆளுநர் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளுநரிடம் எங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளோம்.
எங்களது கருத்துகளைப் பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். எங்களுக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவுதான் உள்ளது. எந்த எண்ணிக்கை பெரியது?
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
134 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறிய சசிகலா கோஷ்டி இப்போது 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவுதான் இருக்கிறது என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications