மயிலாடுதுறை அருகே மகளின் பிரசவத்திற்கு போன என்ஜினியர்.. வீட்டில் ஒரு கிலோ தங்கம் கொள்ளை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் சர்க்கரை ஆலையில் என்ஜினியராக பணியாற்றி வரும் செல்வேந்திரன் என்பவர், தனது மகளின் பிரசவத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்த போது, அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 125 பவுன் நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வீடுகளின் வெளியே மட்டுமல்ல, உள்ளேயும் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டிய அவசியத்தை திருடர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள். வீட்டிற்குள் புகுந்து திருடர்கள் கொள்ளையர்கள் கொள்ளை அடிப்பதை தடுக்க அலாரம் செட்செய்வது, வெளிநபர்கள் வந்தால் அலர்ட் செய்வது போன்ற தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில் அண்மைக்காலங்களில் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளை அடிப்பது அதிகரித்துள்ளது. தங்களது வாழ்நாள் சேமிப்பை திருடர்களின் செயலால் பறிகொடுக்கும் குடும்பஙகள் அதில் இருந்து மீண்டு வர முடியாமல்பெரும் துயரத்திற்கு உள்ளாகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் கிராமத்தில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்த 60 வயதாகும் செல்வேந்திரன் என்பவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சேத்தியா தோப்பு பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். என்ஜினியர் செல்வேந்திரன் கடந்த ஜனவரி 6ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, மகளின் பிரசவத்துக்காக மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்துடன் போயிருக்கிறார். மருத்துவமனையில் தங்கி இருந்த செல்வேந்திரன் குடும்பத்தினர் 3 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தனர்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வேந்திரன் குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ மற்றும் சூட்கேசை மர்மநபர்கள் உடைத்து அதில் இருந்த 125 பவுன் நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதை கண்டுஆடிப்போனார்கள்.
இதுகுறித்து செல்வேந்திரன் திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சீர்காழி டிஎஸ்பி ராஜ்குமாா், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை போன வீட்டில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
கடந்த வாரம் சீர்காழி அருகே மேலச்சாலையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை மர்மநபர்கள் உடைத்து ரூ.6லட்சம் கொள்ளை அடித்து சென்றிருந்தார்கள். இப்போது சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டில் 125 பவுன் நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் கொள்ளை போன சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications