டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: மோதலில் ஈடுபட்ட 128 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

குமரிமாவட்டம் களியக்காவிளை அருகே மலையடி சமுதாயபற்றி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக கடந்த நான்கு மாதங்களாக முயற்சி நடைபெற்று வந்தது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஒரு டெம்போவில் நூற்றுக்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டது. பொது மக்கள் டெம்போவை சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மது பாட்டில்கள் உடைக்கப்பட்டன.
தகவலறிந்த களியக்காவிளை இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் ஜீப்பில் வந்தனர். பொது மக்கள் அவர்களை தாக்கினர். இதில் ஜீப் சேதமடைந்தது. சிறப்பு எஸ்.ஐ. அருள்தாஸ் காயமடைந்தார். இதை தொடர்ந்து எஸ்.பி.மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மோதலில் 8.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டதாக டாஸ்மாக் ஊழியர் சதீஷ்குமார் போலீசில் புகார் செய்தார். இதுபோல எஸ்.ஐ. அருள்தாசும் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் மோதலில் ஈடுப்பட்டு வாகனங்களையும்,போலீசாரையும் தாக்கி மதுப் பாட்டில்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுப்பட்டவர்களின் வீடுகளில் சென்று சோதனை நடத்தினர். அப்போது சில வீடுகளில் அவர்கள் பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தில் மேல்புறம் யூனியன் தலைவர் ஜார்ஜ் மற்றும் 8 பெண்கள் உட்பட 128 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதட்டமான சூழல் வருகிறது.












Click it and Unblock the Notifications