சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழகம் முழுவதும் 13 பேர் பலி!
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்துகளில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Recommended Video

சென்னை: தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்துகளில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் நேற்று மாலை முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டி வருகிறது. இந்தியாவில் நேற்று நள்ளிரவில் 2017ஆம் ஆண்டு விடைபெற்று 2018 புத்தாண்டு பிறந்தது.
இதனை முன்னிட்டு சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு புத்தாண்டை கொண்டாடினர். அவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், கேக் வெட்டியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்றனர்.

பலஇடங்களில் விபத்து
இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் விபத்துகள் நேரிட்டுள்ளன. இதில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கண்காணப்பு பணி..
புத்தாண்டை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆங்காங்கே அவசர ஊர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

200 பேர் காயம்
ஆனாலும் அவற்றையெல்லாம் மீறி நேற்று இரவு ஒரே நாளில் சென்னையில் மட்டும் 176 இடங்களில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. அதில் காயம் அடைந்த 200க்கும் மேற்பட்டவர்கள் ராஜீவ்காந்தி, ராயப்பேட்டை, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள இளைஞர்
82 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கபட்டு உள்ளனர். இருவர் உயிரிழந்து உள்ளனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரெய்மான் என்ற 29 வயது இளைஞர் புத்தாண்டை நண்பர்களுடன் கொண்டாடினார். பின்னர் கொண்டாட்டங்கள் முடிந்து இரு சக்கர வாகனத்தில் ரெய்மான் திரும்பி கொண்டிருந்தார்.

கேரள இளைஞர் பலி
எழும்பூர் லேன்ட்ஸ் கார்டன் சாலையில் அதி வேகமாக வந்த ரெய்மானின் இருசக்கர வாகனம் நடைபாதையில் மோதியது. விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

மதுபோதையா?
இது குறித்து எழும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த இளைஞர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்
இது போல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட விபத்துகளில் 13 பேர் பலியாகி உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications