மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி சாகும் வரை உண்ணாவிரதம்
தேனி: தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் இரண்டு வயதான முதியவர்கள்.
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் உணர்வாளர்களான திருப்பூர் க.இரா. முத்துசாமி, தேனி ஈசுவர வடிவு லிங்காலிங்கம் அடிகள் ஆகியோர் தேனியில் உள்ள அய்யா வழி புத்தக அரங்கில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த 7 ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டமானது ஆறாவது நாளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் இவர்கள் இருவரும் தங்களுடைய போராட்டத்தினைக் கைவிட முன்வரவில்லை.
உண்ணாவிரதத்தின் போது தமிழ்பண்பாட்டை சிதைக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக மூடவேண்டும். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழக அரசின் அனைத்துத்துறை வேலைவாய்ப்புகளையும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.