மறக்க முடியுமா.. கும்பகோணம் பள்ளியில் 94 பிஞ்சுகள் கருகி பலி.. 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று
கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் கருகி பலியான தினம் இன்று. 13ம் ஆண்டு நினைவு நாளில் பெற்றோர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளுக்கு 13வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு ஜூலை 16ம் தேதி தலைவாரி பூச்சூட்டி, சீருடை அணிந்து பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைத்தனர் பெற்றோர்கள்.
முறையாக கட்டப்படாத பள்ளிக் கட்டடத்தில் பிடித்த திடீர் தீ, 94 குழந்தைகளை பலிவாங்கியது. தப்பி வெளியேற முடியாமல் மரித்த அந்தப் பிஞ்சுகளின் பெற்றோர்களை மட்டுமல்லாமல் தமிழக மக்களையே உலுக்கி எடுத்தது இந்த விபத்து.
94 குழந்தைகள் கருகி பலி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டது ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி. விதிமுறைப்படி கட்டப்படாத அந்தப் பள்ளிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தன. 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
நினைவு அஞ்சலி
இதையொட்டி பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. மேலும், பாலக்கரை நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி நிகழ்வும் நடைபெறுகிறது.
மோட்ச தீபம்
மேலும், கும்பகோணம் மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துகின்றனர் பெற்றோர்களும் உறவினர்களும். இந்த நிகழ்வில் பல்வேறு சமூக ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.
கோரிக்கை
தமிழக மக்களை உலுக்கி எடுத்த இந்த விபத்திற்கு பின்பும் தமிழகத்தில் பல பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டிய கட்டடங்களில் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. இது போல் பெரிய விபத்துக்கள் நடக்கும் போது மட்டும் அதைப் பற்றி பேசாமல், நிரந்தரமான சட்டதிட்டங்களை அரசு கொண்டு வந்து அதை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.