மழை மிரட்டினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் விநியோகம்: 14 லட்சம் பேர் மீட்பு
சென்னை: சென்னையில் தொடர்மழை விட்டாலும், அவ்வப்போது கனமழை பெய்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள், தூய்மைப் பணிகள் ஆகியவற்றால் சென்னையின் நிலை மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது.

பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் மாநில அரசு மற்றும் கடற்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவப் படை, மீனவர்கள் குழு உள்ளிட்டவை நிவாரணப் பணிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
19,500 பேரை மீட்ட ராணுவம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து இதுவரை 19,500 பேரை ராணுவத்தினர் மீட்டுள்ளனர் என்று தென்பிராந்திய ராணுவ அதிகாரி கர்னல் ஆன்டனி கிராஸி தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இதுவரை 19,500 பேரை ராணுவம் மீட்டுள்ளது. இவர்கள் அனைவரும் படகுகள், ராணுவ வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
24 மணிநேர கட்டுப்பாட்டு அறை
60 ஆயிரம் நிவாரணப் பொருட்களை மக்களுக்கு ராணுவத்தினர் விநியோகம் செய்துள்ளனர். நிவாரண உதவி தேவைப்படுவோர் நேரிடையாக ராணுவ அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இதற்காக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது'' என்று கர்னல் ஆன்டனி கூறியுள்ளார்.
14 லட்சம் பேர் மீட்பு
வெள்ளம் சூழப்பட்ட பகுதிகளில் இருந்து 14 லட்சத்து 32 ஆயிரத்து 924 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 14 லட்சத்து 32 ஆயிரத்து 924 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
90 லட்சம் உணவு பாக்கெட்டுகள்
மீ்ட்புப் பணிகளுக்காக 600 படகுகள் பயன்படுத்தப்பட்டன. 5 ஆயிரத்து 554 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 85 லட்சத்து 98 ஆயிரத்து 280 உணவுப் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மருத்துவ முகாம்கள்
மேலும், 24 ஆயிரத்து 220 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 20 லட்சத்து 17 ஆயிரத்து 244 பேர் பயன்பெற்றுள்ளனர். ஆயிரத்து 536 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 7 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நிவாரண மையங்களில் 453 டன் பால் பவுடர் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முழுவீச்சில் தூய்மைப் பணி
மாநகராட்சியில் ஏற்கெனவே 22 ஆயிரத்து 500 துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கூடுதலாக பிற மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 24 ஆயிரத்து 500 பேர் மூலம் குப்பைகள், கழிவுகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications