சென்னைவாசிகளே கவனம்... வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை
சென்னை: சென்னையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து, பெண் மீது மயக்க ‘ஸ்பிரே' அடித்து 14 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 27-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (45). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில், கீழ் வீடு காலியாக இருந்துள்ளது. எனவே, அங்கு வாடகைக்கு விடப்படும் என பலகை மாட்டப் பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல ஜெகதீஷ் வேலைக்குச் சென்று விட இந்திராணி மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். மாலை 4 மணியளவில் 40 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர், வீடு வாடகைக்கு கேட்பது போல் இந்திராணியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.
வீட்டிற்கு உள்ளே நின்றபடியே அவரிடம் பேசியுள்ளார் இந்திராணி. அப்போது மறைத்து வைத்திருந்த மயக்க மருந்து ஸ்பிரேயை இந்திராணி முகத்தில் அடித்துள்ளார் அந்நபர். இந்திராணி மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே அந்த நபர் இந்திராணி அணிந்திருந்த தாலி சங்கிலி, மோதிரம் என 14 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். நீண்டநேரமாக இந்திராணி மயக்க நிலையிலேயே இருந்துள்ளார்.
நீண்டநேரமாக இந்திராணியின் வீட்டுக் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தார் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இந்திராணி மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக இது தொடர்பாக ஜெகதீஷுக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டிற்கு விரைந்து வந்த ஜெகதீஷ், இந்திராணியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் இது தொடர்பாக வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications