சென்னையில் தொடரும் கொலைகள் எதிரொலி... இரண்டு நாட்களில் 161 ரவுடிகள் கைது
சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் சிறப்பு தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 161 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.
சென்னை மாநகரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. நேற்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் குற்ற சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடந்த 2 நாட்களில் மாநகர் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இப்படையினர் 161 ரவுடிகளை கைது செய்துள்ளனர். பிடிபட்ட ரவுடிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறுகையில், இரவு நேர ரோந்து பணியை தாமே நேரடியாக ஆய்வு செய்ய இருப்பதாக கூறினார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரயில்வே போலீசாருக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ராஜேந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications