18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், குட்கா வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் - நவ. 16ல் விசாரணை
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், திமுக எம்எல்ஏக்களின் குட்கா வழக்கு உள்பட அனைத்து வழக்குகளின் விசாரணை வரும் 16ம் தேதி உயர்நீதிமன்றத்தில் தொடங்குகிறது.
சென்னை: எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட சட்டசபை தொடர்பான வழக்குகள் அனைத்தையும் தாமே விசாரிப்பதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். நவம்பர் 16ஆம் தேதியன்று இந்த வழக்குகளின் விசாரணை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. சார்பில் சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேபோல் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதவிர கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ், மாபா பாண்டியராஜன் ஆகியோர் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்கக் கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. பிச்சாண்டி சமீபத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி கேள்வி
இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த நவம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தினகரன் சார்பில் அபிஷேக் சிங்வி ஆஜரானார். திமுக சார்பில் என்.ஆர். இளங்கோ, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.எஸ், வைத்தியநாதன், சபாநாயகர் சார்பில் ஆரியமா சுந்தரம் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனு என்ன ஆனது என்றார்.
காலம் தாழ்த்துவதாக புகார்
தகவல் இதற்கிடையே திட்டமிட்டு பேரவை செயலாளர் காலம் தாழ்த்துவதாக தினகரன் தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து 21 திமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சட்டப்பேரவை செயலாளர் தரப்பு வழக்கறிஞர் விஜய நாராயண் தகவல் அளித்தார்.
அரசியல் சாசனத்தோடு தொடர்பு
அப்போது நீதிபதி ரவிச்சந்திரபாபு, சட்டசபை தொடர்பான இந்த அனைத்து வழக்குகளும் அரசியல் சாசனத்தோடு தொடர்புபட்டிருப்பதால், இந்த அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி தலைமையிலான ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கருதுகிறேன். எனவே இந்த அத்தனை வழக்குகளையும் தலைமை நீதிபதி அவர்களுக்கு அனுப்புகிறேன் என்று கூறினார்.
சட்டசபை வழக்குகள் மாற்றம்
முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடந்த வழக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ், பாண்டியராஜன் அமைச்சர் பதவியை பறிக்கக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு , 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரிதான் என் சமூக ஆர்வலர் செம்பியன் தேவராஜன் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் அனைத்தையும் கூடுதல் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி அமர்வு விசாரணை
சட்டசபை தொடர்பான வழக்குகள் அனைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. வரும் 16ஆம் தேதியன்று இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அனைத்து வழக்குகளையும் தாமே விசாரிப்பதாக இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.