சென்னை திருமழிசையில் பத்திரிகையாளர் வீட்டில் 19 பவுன் நகை, ரொக்கம் கொள்ளை
சென்னை திருமழிசையில் பத்திரிகையாளர் சங்கர் வீட்டில் 19 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
Recommended Video
சென்னை: திருமழிசையில் பத்திரிகையாளர் சங்கர் வீட்டில் 19 பவுன் நகைகளும், 14 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னை திருமழிசையை சேர்ந்தவர் வி. சங்கர். இவர் தினசரி பத்திரிகையில் ஒன்றில் முதன்மை செய்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நேற்று சங்கர், அவரது மனைவி, குழந்தைகள் என அனைவரும் வீட்டை பூட்டிக் கொண்டு சென்றுவிட்டனர்.
தனி வீடு என்பதாலும் பூட்டியிருப்பதாலும் இந்த சந்தர்ப்பத்தை மர்ம நபர்கள் பயன்படுத்த திட்டமிட்டனர். இதையடுத்து அந்த வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது ஒரு அறையில் பீரோவில் இருந்த 19 சவரன் நகை மற்றும் ரூ.14 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
மருத்துவமனைக்கு சென்ற சங்கர் குடும்பத்தினர் வீடு திரும்பியதும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது குறித்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.