சென்னை: கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு… பட்டப்பகலில் ஒட ஒட விரட்டி வெட்டினர்
சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை மர்மக்கும்பல் ஒன்று ஓட ஒட அரிவாளால் விரட்டி வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வில்லிவாக்கம் புதிய ஆவடி ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு கோபிநாத்(வயது 19), ராஜேஷ்(17), தினேஷ்(15) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
கோபிநாத் அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ராஜேஷ், தினேஷ் ஆகிய 2 பேரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
கோபிநாத் கல்லூரிக்கு தினமும் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் மூலம் சென்று வருகிறார். நேற்று காலை கோபிநாத் தனது சகோதரர்களுடன் கல்லூரிக்கு செல்வதற்காக வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு நடந்து சென்றார்.
அரிவாளுடன் விரட்டிய கும்பல்
எம்.என். நாயுடு 2-வது தெருவில் அவர்கள் சென்ற போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தியால் கோபிநாத் தலையில் வெட்டினர். இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த கோபிநாத் உயிர் பிழைப்பதற்காக தப்பி ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று ஓட, ஓட அவரது கை, கால் மற்றும் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
உடல் முழுவதும் வெட்டு
உடல் முழுவதும் ரத்தக்காயங்களுடன் படுகாயம் அடைந்த கோபிநாத் ஆவடி சாலையில் மயங்கி விழுந்தார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக கோபிநாத்தை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்லிவாக்கம் உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பழிக்குப் பழியா?
முதல் கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் சதீஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக கோபிநாத்தை அந்தக் கும்பல் வெட்டியிருப்பது தெரியவந்துள்ளது.இந்த வழக்கு தொடர்பாக கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மர்மகும்பலுக்கு வலை
எனவே அந்த முன்விரோதம் காரணமாக சதீஷின் நண்பர்களால் கோபிநாத் வெட்டப்பட்டாரா? கல்லூரி மாணவர்களுக்கிடையே விரோதம் காரணமாக மர்ம கும்பலால் வெட்டப்பட்டாரா? அல்லது காதல் விவகாரமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த ரயில் நிலையம்பகுதியில் கையில் அரிவாளுடன் மர்ம கும்பல் விரட்டி வெட்டிய சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications