கரூரில் மாணவி கொலை வழக்கில் 2 பேர் கைது
கரூர்: கரூரில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்காவிற்குட்பட்ட பிச்சம்பட்டியை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி மகள் வினிதா (17) , இவர் கடந்த ஆண்டு +2 படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு விண்ணப்பம் செய்த இடைப்பட்ட காலத்தில் அருகில் உள்ள புலியூரில் தனியார் கொசுவலை கம்பனிக்கு தாற்காலிகமாக வேலைக்கு சென்று வந்துள்ளார்.
வழக்கம் போல் 2014 ஜூன் 23ம் தேதி மாலை பணி முடித்து கம்பெனி வேனில் கிருஷ்ணராயபுரம் வந்து இறங்கிய வினிதா தனது சைக்கிளை எடுத்து கொண்டு பிச்சம்பட்டி நோக்கி சென்றார் அப்போது ஆட்கள் இல்லாத பகுதியில் வினிதாவை இடை மறித்த மர்ம நபர்கள் அருகில் உள்ள வெற்றிலை கொடிக்காலுக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக கரூர் காவல்துறையினர் 13 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் திருட்டு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த குளித்தலை அடுத்த நங்கவரத்தை சேர்ந்த ராமச்சந்திரனை (27) , நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது வினிதாவை ராமச்சந்திரன் கொலை செய்தது தெரியவந்தது.
இக்கொலைக்கு உடந்தையாக இருந்த லாலாபேட்டையை சேர்ந்த மணிகண்டனையும் (27) , கைது செய்த காவல்துறையினர் குளித்தலை குற்றவியல் நீதிமன்ற எண் 2ல் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி லதா இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.