தொடரும் கொடுமை.. பயிர்கள் கருகியதால்... 2 விவசாயிகள் வயலிலேயே சுருண்டு விழுந்து மரணம்
உளுந்து பயிர் கருகிய அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி மரணம் அடைந்தார். தொடரும் விவசாயிகள் மரணத்தால் விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினரும் கலக்கத்தில் உள்ளனர்.
சென்னை: சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கிறது விவசாய சமூகம். பயிர்கள் கருகியதால் மாரடைப்பு ஏற்பட்டு போளூர் மற்றும் அரியலூரைச் சேர்ந்த 2 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகில் உள்ளது மேல்வன்னியனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். விவசாயியான இவர் அவரது விளை நிலத்தில் உளுந்து பயிரிட்டுள்ளார். இந்தப் பயிர் போதிய அளவு தண்ணீர் இன்றி காய்ந்து கருகிவிட்டது.
இந்நிலையில், இன்று விவசாய நிலத்திற்கு சென்ற நாராயணன், கருகிய உளுந்து பயிரைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். வேதனையை தாங்க முடியாமல் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. விளை நிலத்திலேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்த நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே போன்று அரியலூரில் உள்ள சுடுகூரில் மேலும் ஒரு விவசாயி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
வறட்சியின் காரணமாக, நாளுக்கு நாள் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் மாரடைப்பால் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள், விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கோரி வருகின்றனர். என்றாலும் தமிழக அரசு அது குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடாதது விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.