ஆபரேஷன் கும்கி.. தேவாரத்தில் 9 பேரை கொன்ற ஒற்றை யானையை விரட்ட 2 கும்கி யானைகள்!
ஒற்றை யானையை பிடிக்க கும்கி யானைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
தேனி: தேவாரம் பகுதியில் விவசாயிகளை கொன்று வந்த ஒற்றை யானையை பிடிக்க இரண்டு கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன.
தேவாரம் பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நிறைய தோட்டங்கள் உள்ளன. அந்த தோட்ட பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த விவசாய நிலங்களை பாழ்படுத்தி வர ஆரம்பித்தது. இதனால் மிகுந்த அச்சமும் கவலையும் அடைந்த மக்கள், அந்த யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டு விட வேண்டும் என்ற வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும். இதே பகுதியில், 5 ஆண்டுகளில் 9 விவசாயிகள் இந்த ஒற்றை யானையால் இறந்துள்ளதால் தாங்கள் மிகவும் பீதியோடு இருக்கிறோம் என்றும் வனப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால், பொள்ளாச்சி காப்பகத்திலிருந்து கலிம் என்ற ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டது. அந்த யானை தேவாரம் மலைப்பகுதியில் கொண்டுபோய் வனத்துறையினர் நிறுத்தினர்.
இதனிடையே தற்போது மீண்டும் ஒரு கும்கி யானை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இரண்டு கும்கி யானைகளை வைத்துக் கொண்டு அந்த ஒற்றை யானையை விரட்டி பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுவிடுவோம் என வனத்துறையினர் பொதுமக்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகளில் இன்று காலை ஈடுபடவும் தொடங்கிவிட்டனர். ஒற்றை யானையை விரட்டும் பணிகளை அந்த கும்கி யானைகள் ஆரம்பித்துள்ளன.