பொள்ளாச்சியில் இரு மாணவிகள் பாலியல் பலாத்காரம்!
கோவை: பொள்ளாச்சியில் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சார்பில் விடுதி ஒன்றும் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 3 மாணவிகள் உட்பட 20 மாணவர்கள் தங்கி இருக்கின்றனர்.
மலை வாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களாகிய இவர்கள் ஆதரவற்ற நிலையில் இங்கு தங்கி, அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் இரவு மாணவர்கள் அனைவரும் படித்து முடிந்ததும் தூங்கச் சென்று விட்டனர்.
இரவு திடீரென மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே விடுதியில் சோதனை செய்யப்பட்டதில் மாணவிகள் இருவர் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த மாணவிகளை தேடி பார்த்தபோது, விடுதிக்கு அருகில் இருந்த கட்டடத்தின் மேல் தளத்தில் மாணவிகள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரத்தம் பெருமளவு வெளியேறிய நிலையில் அங்கு மயங்கி கிடந்துள்ளனர்.
இதையடுத்து, அந்த இரண்டு மாணவிகளும் சிகிச்சைக்காக உடனே பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மாணவிகளையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து அந்த மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தது யார் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், போலீசார், விடுதிக்கு அருகில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வரும் குரு என்பவர் மீது சந்தேகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், விடுதியில் உள்ளவர்கள் யாராவது இதுபோல் செய்திருக்க கூடும் என்றும் அவர்கள் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 2 பள்ளி மாணவிகள் நள்ளிரவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications