பெண் செய்தி வாசிப்பாளர் கொடுத்த பாலியல் புகார்: சன் டி.வி. நிர்வாகிகள் மேலும் 2 பேர் மீது வழக்கு!!
சென்னை: சூர்யா டி.வி. பெண் செய்தி வாசிப்பாளர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் சன் டி.வி. குழும நிர்வாகிகள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான மலையாள செய்தி சேனலான சூர்யா டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தீபி. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அலுவலகத்தில் தீபி பணிபுரிந்தார்.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் தீபி கொடுத்த புகார் மனுவில், சன். டி.வி. சி.ஓ.ஓ. பிரவீன் மற்றும் சிலர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர். எனக்கு தரவேண்டிய சம்பள பணத்தையும் கொடுக்க மறுக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பிரவீனை கடந்த 26-ந் தேதி சென்னை அண்ணாநகரில் கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தீபியின் புகாரின் பேரில் சன் டி.வி. நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு துணைத் தலைவர் கண்ணன், சூர்யா டிவி தலைமை நிர்வாகி டேவிட் சாஜு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.
பிரவீனை போலீசார் கைது செய்ய இருப்பதாக தெரியவந்தது முதல் இருவரும் அலுவலகத்துக்கு விடுப்பு கொடுத்துவிட்டு பணிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே சன் டி.வி. குழுமத்தின் சன் நியூஸ் சேனலில் அகிலா என்ற பெண் செய்தி வாசிப்பாளர் பாலியல் புகார் கொடுத்ததால் சன் நியூஸ் எடிட்டராக இருந்த ராஜா, அவரது உதவியாளர் வெற்றிவேந்தன் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த நிலையில் சன். டி.வி. குழும தலைமை நிர்வாகிகள் மூவர் மீண்டும் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது பத்திரிகை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications