மருத்துவக் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த இரு வாலிபர்கள் கைது
கோவை : பல் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த இரு வாலிபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த குமார் சர்குந்தா என்பவரின் 24 வயது மகள் வந்தனா. இவர் விடுதியில் தங்கி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு பல் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
வந்தனாவுடன் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்த உடுமலையை சேர்ந்த பிரபு என்ற 25 வயது வாலிபர் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் பலமுறை எச்சரித்தும் பிரபு கேட்டபாடில்லை.
ஏற்கனவே, பிரபுவின் காதல் தொல்லையால் வந்தனாவின் கல்வி பயிலும் திறன் பாதிக்கபடுவதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்படி போலீசாரும் பிரபுவை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவியை வழிமறித்த, பிரபு மற்றும் உடுமலையை சேர்ந்த பழைய குற்றவாளி வெங்கடாசலபதி ஆகிய இருவரும், மாணவி வந்தனாவிடம் பிரபுவை காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளனர்.
மாணவி மறுக்கவே, இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்துவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததோடு, தாக்கவும் செய்துள்ளனர். பலர் முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவத்தால் அவமானமடைந்த மாணவி வந்தனா, இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த பிரபு, மற்றும் வெங்கடாசலபதி ஆகிய இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications