ஆர்.கே.நகர் தொகுதியில் கத்தியுடன் பதுங்கி இருந்த பாக்சர் வடிவேலு மகன் உள்பட 2 ரவுடிகள் கைது
ஆர்.கே. நகர் தொகுதியில் கத்தியுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடி பாக்சர் வடிவேலு மகன் உள்பட 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்தப் பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பாக கொருக்குபேட்டை, ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை, புதுவண்ணாரபேட்டை, காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் ஆகிய பகுதிகளில் ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை காசிமேடு பகுதியில் 2 ரவுடிகள் பதுங்கி இருப்பதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உஷாரான போலீசார் அப்பகுதியில் முழுவதும் மாறுவேடமிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
காசிமேடு பவர்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 ரவுடிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், காசிமேடு பகுதியை சேர்ந்த 34 வயதான வெற்றிவேல், தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த 31 வயதான செல்வம் என்பதும் தெரிய வந்தது.
வெற்றிவேல் பிரபல ரவுடி பாக்சர் வடிவேலுவின் மகன் என்பதும் விசாரணையின் போது தெரியவந்தது. இதையடுத்து வெற்றிவேல், செல்வம் ஆகியோரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications