தூத்துக்குடியில் அடுத்த பரபரப்பு... கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல்- 2 மாணவர்கள் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு கல்லூரி முதல்வருக்கு மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடத்தில் உள்ள பிஷப் கால்டுவெல் கல்லூரியின் முதல்வர் செல்லையா. அந்த கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ.டி. இரண்டாம் ஆண்டு படிக்கும் தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த சந்தனமாரியப்பன் மற்றும் எம்.எஸ்.சி. படிக்கும் நயினார்விளை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் சில மாணவிகளை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து செல்லையா அந்த 2 மாணவர்களையும் கண்டித்ததோடு பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிப்பேன் என்று தெரிவித்தாராம். இதையடுத்து அந்த 2 மாணவர்களும் தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த மரியவளவன் என்பவரை அழைத்துச் சென்று அவர் தங்களின் மாமா என்று பொய் சொல்லியுள்ளனர். மரியவளவன் நெல்லை அருகே உள்ள கீழ வல்லநாடு இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரியின் கப்பல் ஊழியர் ஆவார். அந்த இன்பன்ட் ஜீசஸ் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் குமார் 3 மாணவர்களால் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் செல்லையா மரியவளவனிடம் மாணவர்கள், குடும்ப விஷயங்கள் குறித்து கேட்டபோது அவர் கூறிய பதில்கள் சந்தேகத்தை எழுப்பின. இதனால் பெற்றோரை அழைத்து வருமாறு செல்லையா மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மாணவர்களோ மரியவளவனுடன் சேர்ந்து செல்லையாவை அடிக்க முயன்றுள்ளனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
உடனே இது குறித்து செல்லையா புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications