சென்னையில் விபத்து... தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் மின்சார ரயில் மோதி பலி
சென்னை: சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் பலியாகிவிட்டனர்.
கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று எழும்பூரில் இருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையம் வந்த போது இரண்டு பேர் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அப்போது அவர்கள் மீது ரயில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணையில் அவர்கள் சாஸ்திரி நகரை சேர்ந்த முனிவேல், கிஷோர்குமார் ஆகியோர் என தெரியவந்தது. இவர்களது உடல்கள் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.
பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வகையில் ரயில் நிலையங்களில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ரயிலில் அடிப்பட்டு பொதுமக்கள் இறக்கும் விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாம்பலம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் செல்லும் வயர் அறுந்து விழுந்ததால் அவ்வழியாக செல்லும் மின்சார ரயில்கள் விரைவு ரயில் செல்லும் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இதனால் ரயிலில் கூட்டம் அலைமோதிய நிலையில் சென்னை பழவந்தாங்கலில் மின்சார ரயிலில் தொங்கி கொண்டு வந்தவர்கள் தடுப்புச் சுவரில் மோதியதில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.