ஸ்கூட்டரின் ஆக்ஸிலேட்டரை முறுக்கிய 2 வயசு குழந்தை.. துணிக்கடை கண்ணாடியை உடைத்து பாய்ந்ததால் விபரீதம்
தேவக்கோட்டை: தேவக்கோட்டையில் ஸ்கூட்டர் ஆக்சிலேட்டரை குழந்தை திருகியதால் துணிக்கடைக்குள் வாகனம் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே ஊனியூரை சேர்ந்தவர் அற்புதராஜ். இவரது மனைவி கவுசல்யா (26). இவர் தனது 2 வயது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் தேவக்கோட்டைக்குச் சென்றார்.

அங்கு திருப்பத்தூர் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அப்போது வாகனத்தின் முன்புறம் நின்றிருந்த கவுசல்யாவின் குழந்தை இரு சக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை முறுக்கியுள்ளது.
இதில் ஸ்கூட்டர் அதிவேகமாக சென்று அங்கிருந்த துணிக்கடையின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு நுழைந்தது. கவுசல்யாவின் வாகனம் அந்த கடையில் இருந்த மேஜையில் மோதியது. இதில் சரிந்து விழுந்த கவுசல்யாவும் அவருடைய மகளும் காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கடை ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தேவக்கோட்டை நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கவுசல்யாவிடம் நடத்திய விசாரணையில் வாகனத்தை ஸ்டார்ட் செய்த போது ஆக்ஸிலேட்டர் பிடிக்கும் கையை எதற்கோ எடுத்த போது எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை ஆக்ஸிலேட்டரில் கையை வைத்து அப்படியே முறுக்கியுள்ளது.
இதனால் கவுசல்யாவின் வாகனம் துணிக்கடைக்குள் நுழைந்தது. குழந்தைகளை இரு சக்கர வாகனத்தில் வைத்து இயக்குவோர் உஷாராக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications