சிறார் காப்பகத்திலிருந்து 32 பேர் ஓட்டம்.. 14 பேர் கைது.. கழுத்தறுத்து 4 பேர் தற்கொலை முயற்சி
சென்னை: சென்னையிலுள்ள கெல்லீஸ் கூர் நோக்கு பள்ளியில் சிறார்களுக்கு நடுவே ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி 32 இளம் குற்றவாளிகள் சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு எழும்பூர் மேஜிஸ்திரேட் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தப்பியோடியவர்களில் 14 பேர் பிடிபட்டனர்.

சென்னை, கெல்லீஸ் பகுதியில் அரசு கூர்நோக்கு பள்ளி செயல்பட்டு வருகிறது. சிறு வயதில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார் குற்றவாளிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பள்ளியில், மொத்தம் 53 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறுவர்கள் நடுவே திடீரென இன்று காலை உணவு வேளையின்போது, பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை பயன்படுத்தி கூர் நோக்கு இல்லத்தில் இருந்து சுமார், 32 சிறுவர்கள் சுவரை ஏறி குதித்து வெளியே தப்பியோடியுள்ளனர்.

சிறார் குற்றவாளிகளை பிடிக்க சென்னை நகரில் போலீசார் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர். விவரம் கேள்விப்பட்டு, குற்றவாளிகளின் பெற்றோர் சிலர் கூர் நோக்கு இல்லத்தை முற்றுகையிட்டு தங்கள் பிள்ளைகள் உள்ளே பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை அறிவதற்காக காத்திருந்தனர். உரிய பதில் வராததால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் நடத்தினர்.
போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்ட நிலையில், எழும்பூர் மேஜிஸ்திரேட் லட்சுமி இன்று மதியம், சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு நடத்தினார்.
இதனிடையே தப்பியோடிய சிறுவர்களில் 14 பேர் இன்று மதியம் போலீசாரிடம் பிடிபட்டனர். அதில், 3 சிறுவர்கள் போலீசாரை பார்த்ததும், டியூப் லைட்டை உடைத்து கழுத்தையும், கைகளையும் அறுத்துள்ளனர். இருப்பினும் உயிருக்கு ஆபத்தில்லை. மருதத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். எஞ்சிய சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications