தூத்துக்குடி தன்னெழுச்சி போராட்டத்தில் சிக்கி காவலர்களும் காயம்!
கலவரத்தில் பாதுகாப்பு போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மக்களின் உணர்வு போராட்டத்துக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதுடன், ஏராளமான காவலர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு முதல்காரணமே போலீசாரின் தடியடி நடவடிக்கைதான். மேல்மட்ட தரப்பின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட ஏராளமான போலீசார், போராட்டக்காரர்களை அடுத்தக்கட்டமாக கண்ணீர்புகையை வீசி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறிய நிலையில், ஒருகட்டத்தில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் ஆத்திரமடைந்து, அடித்து நொறுக்குதல், தீ வைத்து எரித்தல் போன்றவற்றில் ஈடுபட, வன்முறை களம் முழுதும் ரத்தக்களமானது.
இதனால் கடைசியாக துப்பாக்கி சூடு என்ற ஆயுதத்தை போலீசார் கையிலெடுத்தனர். இதனால் தூத்துக்குடி முழுவதும் போர்க்களமாக காட்சியளிக்க தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற துப்பாக்கி சூடு தமிழகத்தில் நடைபெற்றதில்லை. தற்போது நடைபெற்ற இந்த துப்பாக்கி சூட்டிற்கு 2 பெண்கள் உட்பட 10 பேர் இறந்திருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும் போராட்டக்காரர்கள் மீண்டும் கூடலாம் என்பதாலேயும், வன்முறையை கட்டுப்படுத்தவும் போலீஸார் மீண்டும் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதுடன், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தடையை மீறி வந்த போராட்டக்கார்களை தடுத்து நிறுத்தும்போதும், தடியடி நடத்தும்போது பதில் தாக்குதலிலும், ஏராளமான போலீசாரும் படுகாயமடைந்தனர். கல்வீச்சில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் மண்டை உடைந்து ரத்தம் வழிய தொடங்கியது. அவர்களும் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications