தீவிரமானது வர்தா புயல்… 200 மீனவர்கள் கரை திரும்பவில்லை.. உறவினர்கள் பீதி
வர்தா புயல் தீவிரமானதை அடுத்து நாகை மாவட்டத்தில் இருந்து கடலுக்குள் சென்ற 200 மீனவர்கள் கரை திரும்பவில்லை.
நாகை: வர்தா புயல் தீவிரமடைந்து இன்று பிற்பகல் கரையை கடக்க உள்ளது. புயல் தீவிரம் அடைந்துள்ளதால் நான்கு நாட்களுக்கு முன்பு கடலுக்குள் சென்ற நாகை மாவட்ட 200 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பீதியில் உள்ளனர்.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் இன்று பிற்பகல் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு 102 கி.மீ துரத்தில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் மேற்கு திசை நோக்கி 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இன்று பிற்பகலில் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் போது 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வர்தா புயல் சென்னையை நெருங்கி வருவதால் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாகவே வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

நாகை 200 மீனவர்கள் கரை திரும்பவில்லை
நாகை மாவட்ட மீனவர்கள் 4 நாட்களுக்கு முன்னதாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இதனிடையே வர்தா புயல் தீவிரமடைந்து இன்று கரையை கடக்க உள்ளதால், கடலில் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கடலுக்குள் சென்ற 200 மீனவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பீதி அடைந்துள்ளனர்.

இருட்டிய பழவேற்காடு
கடல் பகுதியில் பலத்த கடல் காற்று வீசுவதால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. சூறைக்காற்றால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. காற்று பலமாக வீசுவதால் பழவேற்காடு மக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

பாதுகாப்பான இடத்தில் மக்கள்
சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 3500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடல் கொந்தளிப்பு
திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய இடங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. திருவொற்றியூர் பகுதியில் கடல் தடுப்பு கற்களைத் தாண்டி அருகில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், கரையோர மக்கள் அச்சத்தில் உள்ளனர். கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications