தீயை அணைக்க தண்ணி வரலயே.. மொட்டத்தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடாதீங்க.. பொங்கிய ஜெயக்குமார்
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பிடித்த தீ இரண்டு நாட்களாக எரிந்ததற்கு அணைக்க போதிய அளவு தண்ணீர் இல்லை என்றக் குற்றச்சாட்டுக்கு மொட்டத்தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சி போடாதீங்க என்று ஜெயக்குமார் கூறினா
சென்னை: இரண்டாவது நாளாக சென்னை சில்க்ஸ் கட்டடம் கொழுந்து விட்டு எரிந்தது. அதனை அணைப்பதற்கு போதிய அளவு தண்ணீர் இல்லை என்றக் குற்றச்சாட்டுக்கு மொட்டத்தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சி போடாதீங்க என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடினர்.
இரண்டாவது நாளாக இன்றும் தீ கொழுந்துவிட்டு கட்டடம் எரிந்த நிலையில், தற்போது தீ கட்டுக்குள் வந்துள்ளது. இதனை ஆய்வு செய்த பின்னர் நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிலைத்தன்மை இல்லை
நிலைத்தன்மை இல்லாத சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கப்பட உள்ளது. அதற்கான இயந்திரம் வர உள்ளது. இயந்திரம் வந்த உடன் நிலைதன்மை இல்லாத இந்தக் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கும். 3 நாட்களில் கட்டடம் இடித்து முடிக்கப்படும். இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது.
அச்சம் வேண்டாம்
150 கி.மீட்டர் சுற்றளவில் உள்ள அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால்தான் வெடித்து தகர்க்கும் திட்டத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை. எனவே, இதுகுறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை.
எதிர்காலத்தில்..
இங்குள்ள மற்றக் கட்டடங்களில் எதிர்காலத்தில் எந்தவித பிரச்சனையும் வராமல் இருக்க ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது. அப்படியே தீ விபத்து ஏற்பட்டாலும் அதனை எப்படி கையாண்டு பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் பாதிப்பில்லாமல் வெளியேற்றுவது என்பது குறித்தெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று ஜெயக்குமார் கூறினார்.
மொட்டத் தலைக்கும் மொழங்காலுக்கும்..
அப்போது, செய்தியாளர் ஒருவர் போதிய அளவு நீர் இல்லாததால்தான் தீயை அணைக்க இரண்டு நாட்கள் தேவைப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு "இது தவறான குற்றச்சாட்டு, இரவு முழுக்க 200 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்புத் துறை, மாநகராட்சி, வருவாய்த் துறை, மருத்துவ துறை என அனைத்து துறைகளும் இங்கே விடிய விடிய இருந்து பணியாற்றி வருகின்றன. மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட வேண்டாம்" என்று ஜெயக்குமார் பொங்கினார்.