7 குட்டி கட்சிகளும், ஜெயலலிதாவின் கூட்டணி பேச்சுவார்த்தையும்...
சென்னை: திமுக, அதிமுகவை பல்லாக்கில் சுமக்க பல கட்சிகள் தயாராக இல்லாத நிலையில் சின்னச் சின்ன கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணி அமைத்து போட்டியிட பெரிய கட்சிகள் தயாராகி வருகின்றன.
திமுக, காங்கிரஸ் கூட்டணி முடிவாகி விட்டது. தேமுதிக தனித்து போட்டியிட தயாராகி விட்டது. அதே போல அதிமுகவில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. முதல்கட்டமாக தமிழக வாழ்வுரிமை கட்சி, 7 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.
தமாகா, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணையும் என தெரிகிறது.
சட்டசபை தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்துள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு என பரபரப்பாக அடுத்த கட்ட வேலைகளை தொடங்கிவிட்டனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் 2014 லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. எனவே இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை பல கட்சிகளும் எழுப்பின. விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கிவிட்டன. ஆட்சியில் பங்கு என்று முழங்கிய காங்கிரஸ் வேறு வழியின்றி திமுக உடன் கூட்டணியில் இணைந்து விட்டது.

காத்திருந்த அதிமுக
தேமுதிக - திமுக இடையே கூட்டணி ஏற்பட்டால் பலமான கூட்டணி அமைப்பது, தேமுதிக - திமுக கூட்டணி ஏற்படாவிட்டால் சிறிய கட்சிகளை இணைத்து அதிக தொகுதிகளில் போட்டியிடுவது என, அதிமுக முடிவு செய்தது.

அவசர ஆலோசனை
தேமுதிக தனது முடிவை அறிவிக்க காலதாமதம் ஆனதால் அதிமுகவும் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் காத்திருந்தது. இந்த நிலையில் தனித்து போட்டியிடப்போவதாக தேமுதிக அறிவிக்கவே, நேற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 7 கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

7 கட்சிகள்
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஜி.தேவராஜன், மாநில செயலாளர் பி.வி. கதிரவன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், இந்திய குடியரசு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

குழு அமைக்க முடிவு
போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. அவர்களிடம் பேசிய ஜெயலலிதா தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்படும்; அவர்களுடன் பேச உங்களுக்கு அழைப்பு வரும். அப்போது தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவெடுக்கலாம்' என தெரிவித்துள்ளார்.

எஸ்.எம்.பாக்கர்:
முதல்வரை சந்தித்துவிட்டு வந்த தலைவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் அதிமுகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக செயற் குழுவைக் கூட்டி முடிவெடுப்போம். நாங்கள் சீட்டும், நோட்டும் வாங்க மாட்டோம் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் தெரிவித்தார்.

செ.கு தமிழரசன்:
அதிமுகவுக்கு தேர்தலில் ஆதரவு அளிப்பதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். கூட்டணி தொடர்பான விஷயங்கள் தொடரும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கூறினார்.

ஜி.தேவராஜன்:
எங்கள் கட் சிக்கு கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளோம். கட்சியினருடன் பேசி முடிவெடுப்பதாக முதல்வர் கூறியுள்ளார் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஜி.தேவராஜன் தெரிவித்தார்.

தனியரசு:
தொகுதி தொடர்பாக முதல்வர்தான் அறிவிப்பார். நாங் கள் ஆதரவை பதிவு செய்தோம். சீட் கொடுக்காவிட்டாலும் ஆதரவு அளிப்போம் என்று கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு கூறியுள்ளார்.

வேல்முருகன்:
எங்கள் கட்சி வலுவாக உள்ள முக்கிய தொகுதிகள் தொடர்பான பட்டியலை முதல்வரிடம் அளித்துள்ளோம். கேட்ட இடங்களை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

வணிகர் சங்க பேரவை வெள்ளையன்
இவர்களைத் தொடர்ந்து வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையனும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். செய்தியாளரிடம் பேசிய அவர், வணிகர்கள் சங்கம் என்ப தால் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது. எங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் அளித்துள்ளோம் என்று கூறினார்.

யார் வர வாய்ப்பு ?
தமாகா, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணையும் என தெரிகிறது. இந்தக் கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதரவு கடிதம்
அதிமுகவிற்க ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய தயாராக இருப்பதாகவும் பல சிறிய கட்சிகளும், அமைப்புகளும் கடிதம் கொடுத்துள்ளனர். அப்படி பிரசாரத்துக்கு போகும் போது செலவுக்காக பெரும் தொகை கட்சிகள் சார்பில் கொடுக்கப்படும் என்பதால், அதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்காகவே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல்
ஆதரவு தெரிவித்த கட்சிகளிடம் அதற்கான கடிதங்களை பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அவர்களிடம் தனித்தனியாக 10 நிமிடங்கள் பேசியதாக கூறப்படு கிறது. மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கட்சிகளுடன் பேசி, விரைவில் தொகுதி பங்கீடுகளை முடித்து வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

6 முனை போட்டி
ஆள் ஆளுக்கு முதல்வர் வேட்பாளர் கனவில் மிதக்கவே இம்முறை சட்டசபை தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, மக்கள் நலக்கூட்டணி, பாஜக என இந்த சட்டசபை தேர்தலில் 6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. எந்தக்கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பது மே 19ம் தேதி தெரியவரும்.












Click it and Unblock the Notifications