'முக்கியமான பேப்பருடன்' விண்ணப்பம்..214 பொதுப் பணித்துறை இன்ஜினியர்களுக்கு ஒரே நாளில் டிரான்ஸ்பர்
கட்டு கட்டாக பணம் குவிந்ததை அடுத்து விருப்ப பணியிட மாறுதல் கேட்ட தமிழக பொதுப் பணித் துறையைச் சேர்ந்த 214 பொறியாளர்கள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: முக்கியமான பேப்பர்களுடன் விருப்ப பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த தமிழக பொதுப் பணித் துறையைச் சேர்ந்த 214 பொறியாளர்கள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக பொதுப் பணித்துறை கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த துறையில் இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், தலைமை பொறியாளர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செயற்பொறியாளராக இருந்த 18 பேர் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் 72 உதவி செயற்பொறியாளர்கள், 115 உதவி பொறியாளர்கள், 27 பேருக்கு செயற்பொறியாளராக பதவி உயர்வு அளித்து நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 214 பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், 'பொதுவாக பொதுப்பணித் துறையில் உள்ள பொறியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது ஒரே நாளில் 214 பேர் டிரான்ஸ்பர் செய்திருப்பது இதுவே முதல்முறை.
டிரான்ஸ்பருக்காக துறையின் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடம் கட்டுக் கட்டாக பணம் அளித்துள்ளனர். அந்த அதிகாரிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறவுள்ளதால் ஒரே நாளில் 214 பேரை இடமாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்றனர்.