ஜெ.வை சந்தித்து ஆசி பெற்ற அதிமுக கூட்டணியின் 233 வேட்பாளர்கள்- களை கட்டிய போயஸ் கார்டன்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 226 வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் 7 வேட்பாளர்கள் என 233 பேரும் இன்று முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்து ஆசி பெற்றனர். தொடர்ந்து தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி ஒரேநாளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 22 ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 29 ஆம் தேதி மனு செய்ய கடைசி நாள் ஆகும். இந்நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தனது தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டார்.
ஒரே நாளில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தேர்தல் களத்தை பரபரப்பாக்கி உள்ளார். அ.தி.மு.க 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.என்றாலும் 234 வேட்பாளர்களும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க வரலாற்றில் 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
சட்டசபை மற்றும் கட்சி கூட்டங்களில் ஜெயலலிதா பேசுகையில் 234 தொகுதியிலும் வெற்றி என்பதே நமது இலக்கு என கூறிவந்தார். அதன்படி 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. பட்டியலில் எதிர்பார்த்தபடி புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 153 பேர் புதுமுகங்கள். இதில் 80 பேர் மாநகராட்சி துணைமேயர், நகராட்சி தலைவர் என உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளாக உள்ளவர்கள்.
139 பேர் பி.இ. உள்ளிட்ட பட்டதாரிகள் ஆவார்கள். 5 பேர் எம்.பி.பி.எஸ் டாக்டர்கள், 31 பேர் பெண் வேட்பாளர்கள், பெண்களுக்கு வேட்பாளர் பட்டியலில் 7.5 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றதைத் தொடந்து அ.தி.மு.க மாவட்ட செயலர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் தேர்தலில் மேற்கொள்ளும் பிரசார உத்திகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு, ஜெயலலிதா பிரசாரம் என அடுத்தடுத்த அறிவிப்புகளால் தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.