மதுரை: ஹெல்மெட் அணியாத பொறியாளரை தாக்கி பொறி கலங்க வைத்த போலீஸ்.. காது அவுட்…
மதுரை: ஹெல்மெட் அணியாமல் சென்ற பொறியியல் பட்டதாரி இளைஞரை மதுரை போலீஸ்காரர் ஒருவர், தாக்கியதில் அவரின் இடது காது ஜவ்வு கிழிந்து, கேட்கும் திறனை இழந்துள்ளார். போலீஸ் அடி என்றால் எப்படி இருக்கும் என்று அப்பாவி ஒருவரிடம் நிரூபித்து அவரின் வாழ்க்கையை அழித்துவிட்டனர் போலீசார் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை கோவில்பாப்பாகுடியைச் சேர்ந்தவர் ராம்தாஸ். இவரது மகன் விமல்குமார் 24, பி.இ., பட்டதாரியான விமல்குமார், சென்னையில் நடக்கும் தனியார் நிறுவன இன்டர்வியூவிற்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்துள்ளார். நேர்காணலில் வெற்றி பெற்று நல்லபடியாக வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்று விமல்குமார் சனிக்கிழமையன்று காலை கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பினார் விமல்குமார். அப்போது, வழியில் போக்குவரத்து போலீசார் மூன்றுபேர் வாகனத்தை நிறுத்தும்படி விமல்குமாரிடம் சைகை காட்டினர். திடீரென போக்குவரத்து போலீசார் நிறுத்த சொல்லியதும் அவர் பயந்துபோய், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார்.
இந்த பதற்றத்தில் அவர், வண்டியை நிறுத்த முயன்றபோது, தவறி நிலைதடுமாறி ஒரு போலீஸ்காரர் மீது விழுந்திருக்கிறார். இதில் ஆத்திரம் அடைந்து கோபமுற்ற அந்த போலீஸ்காரர், திடீரென விமல்குமாரின் இடது கன்னத்தில் பளார் என ஒரு அறைந்தார். இதில், நிலைகுலைந்த விமல்குமாரின் கன்னம் வீங்கியதுடன், இடது காதில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியதும் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விமல்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது இடது காதின் ஜவ்வு கிழிந்து, கேட்கும் திறனை இழந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர். போலீசாரின் இந்த செயலால் தற்போது, நேர்காணலில் பங்கேற்க முடியாமல் போனதுடன், தனது ஒரு பக்க காதின் கேட்கும் திறனையும் இழந்து தவித்து வருகிறார் விமல்குமார்.
கன்னத்தில் அறைந்த போலீசாரோ, ஹெல்மெட் போடாமல் 'ராங் ரூட்டில் விமல்குமார் வந்தார். வண்டியை நிறுத்தும்போது, எஸ்.ஐ., மீது மோதி தப்ப முயன்றார். அவரை மடக்கிப் பிடித்தோம்; தாக்கவில்லை' என்று கூறியுள்ளனர். தற்போது, விமல்குமார் சார்பில் மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிடம், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
போலீசாரின் செயலால், இன்டர்வியூவில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பை இழந்ததுடன், ஒரு பக்க காதின் கேட்கும் திறனையும் இழந்து, தவித்து வருகிறார் விமல்குமார்












Click it and Unblock the Notifications