நாகை அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
நாகப்பட்டினம்: இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 25 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி சிறை பிடித்து செல்லும் சம்பவம் நடைபெற்று வருகிறது. அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்வது வழக்கம்.
இந்நிலையில் இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் 48 கடல் மைல் பகுதியில் இலங்கையை சேர்ந்த 25 மீனவர்கள் 5 படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக அவர்கள் சிறை பிடிக்கப்பட்டதாக இந்திய கடற்படையினர் தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் காரைக்கால் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம், பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.