குடியரசு தின அணிவகுப்பில் குற்றவாளி ஜெ. படம் வைத்தது அவமானம்: டுவிட்டரில் ராமதாஸ் கண்டனம்
சென்னை: குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது அவமானகரமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 66வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா நடைபெற்றது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட இந்த விழாவில், ஆளுநர் ரோசய்யா கொடியேற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு துறை சார்பாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடந்தது. இதில், காவல்துறை உள்பட 25 துறைகளின் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இந்த வாகனங்களின் அனைத்திலும், சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று எம்எல்ஏ, முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அவர், ‘குடியரசுத் தினவிழா அணிவகுப்பில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது அவமானகரமானது, இந்தியாவுக்கு இழுக்கு' எனக் குறிப்பிட்டுள்ளார்.