முதல் முறையாக 'கோரசாக' அமைச்சர்கள் பதவியேற்பு! 14,14 பேராக பதவியேற்றனர்!!
சென்னை: அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் 'கோரஷாக' பதவியேற்றனர். மொத்தம் 28 அமைச்சர்கள் 14, 14 பேராக 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழகத்தின் முதல்வரக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். பொதுவாக புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும் போது முதல்வரைத் தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சர்களும் தனித்தனியாக மைக் முன் வந்து பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு ஆளுநர் தனித்தனியாக பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

ஆனால் இன்று அப்படி நடைபெறவில்லை. 28 அமைச்சர்களும் மொத்தமாக பதவி ஏற்றுக் கொண்டனர். 28 அமைச்சர்களும் இரு குழுக்களாக அதாவது 14, 14 பேராகப் பிரிக்கப்பட்டு மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்கள் மேடையின் இருபுறமும் நின்று கொண்டனர். இவர்களுக்குப் பதவி ஏற்க வசதியாக 14 மைக்குகள் வைக்கப்பட்டிருந்தன. ஆளுநர் ரோசையா "நான்" என்று வாசிக்கத் தொடங்கியது ஒவ்வொரு அமைச்சர்களும் அடுத்தடுத்து தங்களது பெயரை உச்சரித்துவிட்டு ஒரே கோரஷாக உறுதிமொழியை வாசித்து பதவியேற்றனர்.

இதனால் 10 நிமிடங்களுக்குள் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதன்பிறகு அமைச்சர்கள் ஒவ்வொருவராக கையெழுத்திட்டனர்.

நல்லநேரம் முடிவடைவதற்குள் அனைவரும் பதவியேற்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு ஏற்பாடு என்ற கிசுகிசுவும் விழா அரங்கில் கேட்க முடிந்தது!!












Click it and Unblock the Notifications