மீண்டும் சிங்களர்கள் அட்டகாசம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 28 பேர் கைது
புதுக்கோட்டை: இலங்கைக் கடற்படையின் அட்டகாசம் சற்றும் குறையவில்லை. இன்று அதிகாலையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவரக்ள் 28 பேரை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்ற சம்பவம் புதுக்கோட்டை மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித்தளத்தில் இருந்து 270 படகுகளில் சுமார் 1100 மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் 7 படகுகளை பறிமுதல் செய்ததோடு அதில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 28 மீனவர்களையும் கைது செய்து இலங்கை கடற்படை தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக கடலோர மீனவர் கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்கப் பிரதிநிதி குட்டியாண்டி கூறுகையில், மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி விட்டது. இதற்கு நிரந்தரத்தீர்வு காண மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே 131 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை தொடர்ந்தும் அடுத்தடுத்து மீன் பிடிப்பது போல தமிழக மீனவர்களைப் பிடித்து வரும் அட்டகாசத்தால் தமிழக மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.