செப்.28-ல் அமெ.துணைத்தூதரகம் முற்றுகை... மதிமுக, விசிக உட்பட 29 அமைப்புகள் அறிவிப்பு
சென்னை : போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆதரவான தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்காவைக் கண்டித்து, சென்னையில் உள்ள அந்நாட்டு துணைத் தூதரகத்தை வரும் 28 ஆம் தேதி முற்றுகையிடப் போவதாக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 29 அமைப்புகள் அறிவித்துள்ளன.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனித நேய மக்கள் கட்சித் துணைத்தலைவர் குணங்குடி அனீஃபா, வழக்கறிஞர் அங்கயற்கண்ணி ஆகியோர், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தனர்.
அப்போது அவர்கள், தமிழீழ இனப்படுகொலையை மறைத்து, கொலைகார இலங்கை அரசையே நீதிபதியாக்கும் வகையில், ஐநா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டுவருவதைக் கண்டித்து, மதிமுக, விசிக, மமக கட்சிகள் உட்பட 29 தமிழர் அமைப்புகள் சார்பில், வரும் 28-ம் தேதியன்று சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழர்கள் அமெரிக்கா சொல்லும் உள்நாட்டு பொறி முறையையோ அல்லது உள்நாட்டு பொறி முறையின் இன்னொரு வடிவமான கலப்பு பொறிமுறையையோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தவும்
ஐ.நா அமைப்பானது, 1948 முதல் தற்போது வரை ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும்,தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பையும் உடனே நடத்தவேண்டும்" என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில், ம.தி.மு.க., தமிழர் தேசிய முன்னனி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட 29 அமைப்புகள் பங்கேற்கின்றன.