நெல்லை, தூத்துக்குடிக்கு அடித்தது யோகம்.. 3 பேருக்கு அமைச்சர் வாய்ப்பு
நெல்லை: ஜெயலலிதா அமைச்சரவையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்று பேருக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக தென் மாவட்டங்களுக்கு 5 அமைச்சர்கள் கிடைத்து வந்தனர். தற்போது நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் அந்த மாவட்டத்தில் அமைச்சர் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்ற சண்முகநாதன் மீண்டும் அமைச்சராகியுள்ளார். கோவில்பட்டி தொகுதியில் வென்ற கடம்பூர் ராஜூ, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து தேர்வான புதுமுகம் ராஜலெட்சுமி ஆகியோருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் சண்முநாதனுக்கு பால்வளத்துறையும், கடம்பூர் ராஜூக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், ராஜலெட்சுமிக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் ஓதுக்கப்பட்டுள்ளது.
சண்முகநாதன் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே கட்சியில் இருப்பவர். மாவட்ட செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்துள்ளார். கடம்பூர் ராஜூக்கு இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக பதவி ஏற்க இருக்கிறார். சங்கரன்கோவில் ராஜலெட்சுமிக்கு முதன் முறையாக அமைச்சர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் படுதோல்வியை தழுவிய நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 9ல் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் கூடுதலாக அமைச்சர் பதவி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது கிடைக்கவில்லை. அதேபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தினருக்கு முக்கிய துறைகளும் கிடைக்கவில்லை என்ற குமுறலும் கட்சியினர் மத்தியில் நிலவுகிறதாம்.












Click it and Unblock the Notifications