சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மஸ்கட்டில் இருந்து விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த வாட்டாகடி ஜபீர் (26) என்ற வாலிபர் சுற்றுலா விசாவில் மஸ்கட் சென்று விட்டு, சென்னை திரும்பியிருந்தார். மஸ்கட்டில் இருந்து கேரளாவிற்கு நேரடியாக விமானம் இருந்தும் அவர் சென்னைக்கு வந்ததால், ஜபீர் மீது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரது பொருட்களை ஒவ்வொன்றாக சோதித்தனர். அப்போது அவரது சூட்கேசில் 5 புதிய செல்போன் பெட்டிகள் இருந்தன. அந்த செல்போன் பெட்டிகளை திறந்து பார்த்தபோது அதில் செல்போன்களுக்கு பதிலாக தங்கக்கட்டிகள் இருந்தன.
ரூ.1 கோடி மதிப்பிலான 3 கிலோ 200 கிராம் தங்கக்கட்டிகளை அவர் மஸ்கட்டில் இருந்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் ஜபீரை கைது செய்த அதிகாரிகள், சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அவரை அழைத்து சென்றனர்.