சென்னை: கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி பலி; இருவர் கைது
சென்னை: பெரம்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பணிபுரியக்கூடிய ஊழியர் ஒருவர், அந்த உணவகத்தின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியுள்ளார். அப்போது விஷவாயுவால் தாக்கப்பட்ட அவர் மயக்கமடைந்துள்ளார்.
மயக்கத்தில் இருந்தவரை காப்பாற்றுவதற்காக சக ஊழியர்கள் இருவர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்களும் விஷவாயுவால் தாக்கப்பட்டு மயக்கமடைந்தனர். இதனால் ராமகிருஷ்ணன்,வினய்,சதீஸ் ஆகிய அந்த மூன்று ஊழியர்களும் கழிவுநீர் தொட்டிக்குள்ளேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்,மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த மூவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த உயிரிழப்பு குறித்து செம்பியம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த ஓட்டலின் உரிமையாளர் மோகன் ராவ், மேலாளர் கோபி ஆகிய இருவரை கைது செய்தனர்.