வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து- 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம்
சிவகங்கை: தேவகோட்டை அருகே வாக்குச்சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. பெரிய வன்முறை சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியாக இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பல வாக்குச்சாவடிகளில் மற்றவர்களின் சதி இல்லாமல், எதிர்பாராத பல சோக சம்பவங்கள் நடைபெற்றன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி தேவகோட்டை அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியின் ஒரு பகுதியில் நேற்று காலை திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த கோட்டூரைச் சேர்ந்த ராமன் மனைவி பாப்பா, 60, சண்முகநாதன் மனைவி காளியம்மாள்,45, நைனார்வயலைச் சேர்ந்த செந்தில்நாதன், 23, ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் பீதியான மற்ற வாக்காளர்கள் வாக்களிக்க முன்வரவில்லை. பின்னர் வாக்காளர்களை சமரசப்படுத்திய தேர்தல் அதிகாரிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தை வேறு அறைக்கு மாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மக்கள் மீண்டும் வரிசையில் நின்று வாக்களிக்க ஆரம்பித்தனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த வாக்குசாவடியில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இதேபோல், சிவகங்கை தொகுதி ஒக்கூர் அண்ணாநகர் வாக்குசாவடியில் வாக்களித்துவிட்டு வந்த வேல்முருகன்(45) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை காற்றோட்டமான பகுதிக்கு போலீசார் தூக்கி வந்தனர். ஆனால், அதற்குள்ளாக பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிதுநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications