கிணறு தோண்டும்போது வெடி வெடித்து விபத்து.. 3 பேர் உயிரிழப்பு.. தென்காசி அருகே சோகம்!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணறு தோண்டும் பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணறு தோண்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடி பொருள் வெடித்து சிதறியதில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ராம்நகரை அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர் பால். இவருக்கு புதுப்பட்டி - ராம் நகர் சாலையில் சொந்தமாக இடம் ஒன்று இருக்கிறது.
இந்த இடத்தில் கிணறு ஒன்று அமைப்பதற்காக காளாத்திமடத்தை சேர்ந்த சக்திவேல் என்ற நபரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் கடந்த 10 நாட்களாக வேலை நடந்து வருகிறது.

கிணறு தோண்டும் பணி
கிண்று தோண்டும் பணிக்காக வழக்கம் போல தொழிலாளர்கள் இன்று காலையில் வேலைக்கு வந்தனர். ஆணையப்பபுரத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் அரவிந்த்(வயது 22), ராஜலிங்கம்(56) அவரது மகன் மாரிச்செல்வம்(26) மற்றும் ஆலங்குளம் காமராஜர் நகரை சேர்ந்த ஆசீர் சாம்சன்(27) ஆகிய 4 பேரும் வேலைக்கு வந்தனர். சுமார் 15 அடி ஆழத்திற்கு கிணறு தோண்டப்பட்டிருந்தது. அதிகளவில் கற்கள் இருந்ததால், அவற்றை பெயர்த்தெடுக்க நேற்று டெட்டர்னேட்டர் எனும் வெடி பொருளை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெடி பொருள் வெடித்தது
பொதுவாக இது மாதிரியான வெடி பொருளை வெடிப்பதற்கு முன் மீட்டர் கருவி மூலம் தரையில் வைத்து சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் சுமார் 20 டெட்டர்னேட்டர் வெடி பொருள்களை வைத்து சோதனை செய்துகொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென வெடி பொருள் வெடித்துள்ளது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த சக்திவேல் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

3 பேர் உயிரிழப்பு
உடனடியாக அவர் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதில் அரவிந்த் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆசீர் சாம்சனும் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ராஜலிங்கம் மற்றும் மாரிச்செல்வம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜலிங்கமும் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வீஞ்ச் உரிமையாளர் சக்திவேலை கைது செய்தனர். கிணறு தோண்டும் பணியில் ஈடுப்பட்டிருந்த போது வெடி பொருள் வெடித்து 3 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications